top of page

தூதுவளை

  • Yogi.L.L.S.Manikghantan,MA(YOGA),RMP (AM)
  • Jun 29, 2016
  • 3 min read

தூதுவளை

SOLANUM TRILOBATUM

தாவர குடும்பம்-SOLANACEAE

(BRINJAL FAMILY)

வேறு பெயர்கள்

தமிழ் - தூதுவளை, தூதுவேளை, ஆரை, தூதுவளம், சிங்கவல்லி

சமஸ்கிருதம் - அலார்க்கா, அஸ்துதர், அகனிடமணி,வள்லிகண்டகாரிஹா

தெலுங்கு - உச்சின்டா, முள்ளமுஸ்டி, கொண்டவுசிண்டா

கன்னடம் - முள்ளுமுஸ்டா, காகாமுன்ஜி

மலையாளம் - தூதவளம், புத்தரிசுண்டா, புத்தசுண்டா

ஒரியா - ஃபிரைஹோட்டி

வளரியல்பு

தூதுவளை வளைந்து படரும் தாவர வகையாகும். படரும் வாய்ப்பு இல்லாத போது செடி போன்ற அமைப்பில் காணப்படும். இது வயல்வெளி, ஈரப்பாங்கான புதர், பாழ் நிலங்கள், களிமண்பாங்கான நிலங்கள் மற்றும் வேலிகளில் வளரும் இயல்பு உடையது.

நீங்கள் மூலிகையை எளிதில் அடையாளம் காணவேண்டும் என்பதற்காகவே அட்டையில் படம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய கீழ்காணும் விபரங்களையும் தந்து மகிழ்கின்றோம்.

தூதுவளை

வளையாத முட்களை கொண்ட இலைகளுடன் காணப்படும்.

ஊதா அல்லது அரிதான வெள்ளை நிறமான பூக்களை கொண்டதாக இருக்கும்.

சிவப்பு நிறத்தில் சிறிய பழங்களுடன் காணப்படும்.

தூதுவளையின் பெருமை

1. இது ஒரு காயகல்ப மூலிகையாகும்.

2. முழுத்தாவரமும் பல்வேறு விதமான மருத்துவத்திற்கு பயன்படும்.

3. இதனை உணவாகவும் உட்கொள்ளலாம்.

4. இருமல், இரைப்பு, கபம் போன்றவற்றைக் குணமாக்கும்.

5. கோழையகற்றும், உடலை தேற்றும், புற்று நோயை குணப்படுத்தும்.

6. இது Common Natural Steroid எனவும் போற்றப்படும்.

நோய் நீக்குவதில் தூதுவளை.

இருமல், இரைப்பு குணமாக

தூதுவளை இலையை பறித்து சுத்தமாக்கி ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளராக வரும் வரை மிதமான வெப்பத்தில் காய்ச்சி வடிகட்டி குடித்து வர இருமல், இரைப்பு தீரும்.

(அல்லது)

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்திட்ட இலைகளை அதே அளவு பொடி செய்த வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் (கலப்படம் இல்லாதது) வதக்கி துவையலாக்கி சாப்பிடலாம். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு, பின்னர் மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிடுதல் என்ற முறையில் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு குணம் அடையும்.

(அல்லது)

சுத்தம் செய்யப்பட்ட தூதுவளை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் தேனில் கலந்து பத்தியமாக கற்பமூலிகையாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோயின் தன்மை குறையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும், சீரண சக்தி அதிகரிக்கும், தாது பலப்படும்.

(அல்லது)

ஒரு டம்ளர் நீருக்கு பத்து இலைகள் என்ற அளவில் குடிநீராக காய்ச்சி தினமும் இரண்டு வேளைகள் மூன்று நாட்கள் குடித்து வர சளியுடன் கூடிய இருமல் குணமாகும்.

(அல்லது)

சுத்தம் செய்த தூதுவளை இலையை பதினைந்து முதல், ஐம்பது கிராம் வரை எடுத்து ஊறவைத்து, அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாக தயாரித்து, காலை உணவாக மூன்று ரொட்டிக்கும் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் இருமல், இரைப்பு குணம் அடையும்.

பிற மருத்துவ பயன்பாடுகள்

1. தூதுவளை ஒரு காயகல்ப மூலிகை. தூதுவளையின் தாது பொருட்களை தனியாகவோ, பிற மூலிகைகளோடு கலந்தோ பக்குவப்படுத்தி பத்தியம் காத்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலை கற்பமாக்கலாம்.

2. தூதுவளை இலையுடன் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர உடலுக்கு வலு கூடும். இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். ஆண்மை சக்தியும் பெருகும்.

3. கால்சியம் சத்து நிறைந்துள்ள தூதுவளை எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளை கீரையுடன் பருப்பு, நெய் சேர்த்து சமைத்து ஒரு மண்டலம் சாப்பிட்டால் பற்கள் பலப்படும்.

4. தூதுவளை கீரையை நன்கு அரைத்து அடை போல செய்து சாப்பிட்டு வர தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், பெருவயிறு மந்தம் போன்றவையும் குணமாகும்.

5. மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர்சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலைநீர் போன்றவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்த மருந்து. மேலும் கண்ணில் உண்டாகும் பித்தநீர் அதிகரிப்பையும் தடுக்கும்.

6. தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வர தாது பலப்படும்.

7. தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட மார்புசளி, இருமல், முக்குற்றம் நீங்கும். பாம்பின் விஷத்தையும் முறிக்கும் வல்லமை தூதுவளைக்கு உண்டு. மேலும் இது நாளுக்கு இருமுறை மலமகற்றும் ஆற்றல் கொண்டது.

8. தைராய்டு கட்டிகள் ஆரம்ப நிலையில் இருந்தால் தூதுவளை அதை குணப்படுத்தும்.

9. இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கூட்டாகவோ, பச்சடியாகவோ காலை, மதியம், இரவு உணவுடன் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டால், அது உடலுக்கு நோய் தடுப்பாகவும், நோய் நீக்கியாகவும் பயன்படும்.

10. தூதுவளை காயை சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாக காயவைத்து பனி மற்றும் மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் குளிரால் உண்டாகும் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

11. தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டை புற்று, கருப்பை புற்று, வாய் புற்று ஆகியவற்றிக்கு தூதுவளை சிறந்த மருந்து ஆகும்.

12. சித்தவைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் எலும்பு புற்று, ஈளை, இருமல், கபநோய்கள், மேகநோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு, வாய்வு, குண்டல வாயு முதலிய பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது .

13. தூதுவளை காயை உலர்த்தி தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி வைத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்து இரவில் மட்டும் சாப்பிட்டு வர மலசிக்கல் நீங்கும்.

14. அறிவை விளக்குவதற்கும், ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும், சளியை அகற்றுவதற்கும் மிக முக்கியமான தாவரம் தூதுவளை என்கிறார் அருட்பிரகாச வள்ளல்பெருமான்.

ஆரோக்கியம் போற்றுவோம்... தூதுவளையை வாரம் இரு முறையேனும் உணவோடு சேர்த்துக்கொள்வோம்...

கவனத்தில் கொள்ள வேண்டியவை;

i இது ஒரு வெப்பமூட்டி என்பதால் தூதுவளையை உடல் ஒப்புவமைக்கு ஏற்ப பயன்படுத்துதல் அவசியம்.

i இலைகளில் உள்ள முட்களை நீக்கி பயன்படுத்துதல்

அவசியம்.

i தூதுவளையை தோசை, சட்னி, துவையல் மற்றும் சாம்பார் செய்து பயன்படுத்தலாம்.

வீட்டு தோட்டத்தில் வளரும் இயல்பு உள்ள இதனை வளர்த்து பலன் பல காண்போமாக.


 
 
 

コメント


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • Twitter Social Icon

©  sri gnana sai indusries. எல்லாம்  கைகூடும்.

bottom of page