துளசி
- YOGI.L.L.S.MANIKGHANTAN ,MA (YOGA),RMP (AM)
- Jun 29, 2016
- 3 min read
துளசி
(மூலிகைகளின் அரசி)
HOLY BASIL
தாவரக் குடும்பம் : LABIATAE
வேறு பெயர்கள்
துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணு பிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீ துளசி மற்றும் ராமதுளசி
வகைகள்
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி மற்றும் நாய்துளசி.
துளசி
துளசியின் தாயகம் இந்தியா. இது தமிழகமெங்கும் பரவியுள்ளது. அந்தமான், நிகோபர் தீவுகளிலும் காணப் படுகின்றது. கற்பூர மணம் பொருந்திய இலைகளையும், கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறு செடி, மருத்துவ குணமும், தெய்வீகமும் மிக்கது.
வளரியல்பு
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களிமண் கலந்த மணற்பாங்கான நிலம் தேவை. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக்குச்சிகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை (pH) 6.5 -7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி வரை இருத்தல் நன்று.
துளசியின் பெருமை
மூலிகைக்குடும்பத்தில் இது ஒரு தெய்வீக மூலிகையும், கல்பமூலிகையும் ஆகும்.
பல்வேறு விதமான சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மருந்துகள் தயாரிப்பதில் துளசியின் பங்கு அளப்பரியது.
எளியமுறை கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியத்திலும் துளசி முதலிடம் பெறுகின்றது.
இதன் நறுமணத்தாலேயே சிற்சில நோய்களை குணமாக்கும் தன்மை பெற்றது.
இருமல், சளி, ஜலதோசம் முதலியவற்றுக்கு துளசி கஷாயமே இன்றும் தீர்வாக உள்ளது.
மேலும், துளசி மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்பட வல்லது. இறந்த சடலத்தின் மீது துளசியைப் போடுவதால் சடலத்திலிருந்து கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும்.
உடலில் வெப்பத்தை உண்டாக்கி, கோழையை அகற்றும்.
வீட்டில் துளசி இருந்தாலே மருத்துவர் ஒருவர் நம் வீட்டில் இருக்கிறார் எனலாம்.
துளசி பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து ஆகும்.
புத்தி சுவாதீனமின்மை, மந்த புத்தி, காக்காய் வலிப்பு, மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றினைப் படிப்படியாக குணமாக்கும் தன்மையும் கொண்டது.
துளசியும் தெய்வீகமும்
துளசியானது நீண்ட நெடிய தெய்வீக பாரம்பரியம் மிக்கது. பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் துளசிச் செடிகளை வளர்த்து திருத்துழாய் (துளசி) மாலை ஆக்கி திருவரங்கத்தானுக்கு சூட்டி மகிழ்ந்ததை நாமறிவோம்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் துளசிச் செடிகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்டு கோதை என்ற பெயரால் வளர்க்கப்பட்டவர்.
பல்வேறு வைணவ திவ்விய தேசங்களில் துளசி கொண்டே அனைத்து ஆராதனைகளும் அமைகின்றன.
ஆஞ்சநேயரை தரிசிக்கச் செல்பவர்களும், பெருமாளை வணங்க வருபவர்களும், பல்வேறு ஆலயங்களில் துளசியையே பிரதான பிரசாதமாக பெறுவதுண்டு.
துளசி கோயிலின் விமானத்தை இடியிலிருந்தும், மின் அதிர்விலிருந்தும் காக்க வல்லதால் இதனைக் கோயிலின் மேற்கூரையில் வளர்த்து வந்தனர்.
துளசியை வணங்குவதாலும், உண்பதாலும், கர்மவினைகள் படிப்படியாகக் குறைந்து, முக்தியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பப்படுகின்றது.
துளசி செய்த தவம்
துளசி விஷ்ணுவை நோக்கி தவம் செய்து, அதன் பலனாக விஷ்ணுவுக்கு பிரியமானவள் ஆனாள். ஆகவே அன்னை மஹா லட்சுமியின் திருஅவதாரமாகவும் துளசி கருதப்படுகின்றது.
மேலும் துளசி அசுரத்தன்மையைப் போக்கி, தெய்வீகத்தன்மையான சத்குணத்தை அளிக்கவல்லது என்ற ஒரு கருத்தும் உள்ளதால், துளசியை வணங்கி வருபவர்களும் உண்டு.
துளசியும் பயன்களும்
1. ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச் சாறை கொடுத்தால் மந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை விடுத்து நிம்மதியாகத் தூங்கும்.
2. மூச்சு விடத் திணறுபவர்கள், துளசி இலையைக் காயவைத்து, அரைத்து அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் சீராகும்.
3. நான்கு துளசி இலையை தண்ணீரில் போட்டுக் குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும்.
4. சுடு நீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால் சளி, மண்டைக் குத்தல் குணமாகும்.
5. பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வேண்டாத அழுக்கு நீங்கும். அடிவயிற்றுக்குத்தல் வலி சரியாகும்.
6. ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் காணாமல் போகும்.
7. கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ, அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால் குணம் கிடைக்கும்.
8. துளசியை ரசமாகச் செய்து சாப்பிட்டால் வாய்க்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.
9. துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
10. உடம்பில் ஏற்படுகின்ற கொப்பளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசிச் சாறு ஒரு சிறந்த நிவாரணியாகும்.
11. துளசி இலைகளை ஆவியில் அவித்து பிழிந்த சாற்றை 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர, பசி அதிகரிக்கும். இதயம், கல்லீரல் ஆகியவை பலப்படும். சளியும் அகலும்.
12. துளசி இலைகளை கதிர்களோடு சாறு எடுத்து காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் குணமாகும்.
13. துளசி விதைச் சூரணம் 5 அரிசி எடைஅளவு தாம்பூலத்துடன் உட்கொள்ள தாது கட்டும்.
14. மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
15. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
16. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து, சாறு எடுத்து, அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
17. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசினால் வலி குறையும்.
18. வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
19. வீடுகளில் துளசி இலைக் கொத்துகளை கட்டி வைத்தாலும் வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
20. துளசி இலை நல்ல நரம்பு ஊக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கின்றது.
21. உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் துளசி குடிநீர் கிடைக்கும். அதை குடித்து வர ஆரோக்கியம் மிகும்.
22. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வு ஏற்பட்டு அது நம்மை பல நோய்களிலிருந்து காக்கும்.
உடல் மற்றும் உள்ள தூய்மைக்கு,
துளசிச் செடியில் மோதி வரும் காற்றைச் சுவாசிக்க, சுவாசிக்க, உடலில் உள்ள அழுக்குகள் மறைவதோடு, உள்ளத்து அழுக்குகளும் அகல்கின்றன. இதன் பெருமையை எல்லாம் மனதில் கொண்டே நம் முன்னோர்கள், துளசியை மாடம் வைத்து, வளர்த்து, விளக்கேற்றி பேணி வந்தனர்.
வழிபாட்டுக்கு என்ற வகையில் இல்லாவிட்டாலும் சிறந்த கிருமிநாசினி, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் சேர்ப்பது என்ற வகையிலாவது நாம் நமது இல்லங்களில் துளசியை நட்டுப் பேணி வளர்த்தல் அவசியமன்றோ!
முந்தைய இதழில் அருகம்புல் பற்றியும், அதன் மேன்மை, தனித்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதன் பெருமையை உணர்ந்த நம்மவர்கள் அருகை வளர்த்து வரும் பணியில் இருப்பீர்கள் என நம்புகின்றோம். அது போலவே துளசியையும் வளர்த்துப் பயன்பெறுவோம்.
மூலம் தரும் ஈகையினை போற்றுவோம்.
துளசி இலைகளை சிரத்தையோடு பறிக்கும் முன் கூற வேண்டிய மந்திரம்
ஸ்ரீ துளஷ்ய அம்ருத ஜென்மஸி
சதாத்வம் கேசவ - ப்ரியே
கேசவார்த்தம் சினோம்யத்வம்
வரதா பவ ஷோபனே||
நகத்தால் கிள்ளிப் பறித்தலும் தனித்தனி இலைகளாக பறித்தலும் கூடாது என்ற கருத்தும் உள்ளது.

SMXLL
Comments