அரசு மரம்
- Yogi.L.L.S.Manikghantan MA (YOGA) ,RMP (AM).,
- Jul 9, 2016
- 2 min read

மரம்: அரசு
விஞ்ஞானப் பெயர்: FICUS RELIGIOSA
குடும்பம்: MORACEAE
இதன் சிறப்பினை உணர்ந்து அரச மரம் என தமிழில் அழைக்கப்பட்டு வரும் இந்த மரம் சமஸ்கிருதத்தில் பிப்பலம், அசுவத்தம் என்றும் ஆங்கிலத்தில் SACRED FIG என்றும் அழைக்கப்படுகின்றது.
அரசமரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். சுமார் 3 மீட்டர் விட்டம் வரை தன்னை பெருக்கிக்கொள்ளும்.
அரச மரத்தின் சிறப்புகள்
மரங்களில் நான் அரச மரம் - ஸ்ரீ கிருஷ்ணர், பகவத்கீதை
அதிக அளவில் பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிடுவதில் முதலிடம் பிடிக்கும் இம்மரத்தினை 108 முறை சுற்றி வந்தால் உடலில் உள்ள நச்சுவாயு இழுக்கப்பட்டு உடலுக்கு தேவையான அளவு பிராணவாயுவைப் பெறலாம். நன்கு வளர்ந்த அரச மரம் ஆண்டுக்கு ஒன்று முதல் நான்கு டன் வரை இலைகளை உதிர்க்கும். அவற்றை முறையாக விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெற முடியும்.
புத்தர் ஞானோதயம் பெற்ற கயாவில் இருந்தது அரச மர வனமே. போதி என்ற சொல் பாலி மொழியாக இருக்கலாம். எனில் போதி மரம் என்றால் அரச மரம் எனப் பொருள். இதே மரத்தடியில் தான் விசுவாமித்திர முனிவருக்கு காயத்ரீ மந்திர சித்தியும், புத்தருக்கு அஷ்டாங்க மார்க்கம் என்ற சம்போதி ஞானமும் கிடைத்தது. நியாயமான தீர்ப்பு அரச மரத்தடியில் கிடைக்கும் என்பதாலேயே சில கிராமங்களில் அரச மரத்தடியில் நியாயம் கேட்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
மருத்துவ குணங்கள்
அரச மரத்தின் துளிர் இலையை அரைத்து பூச புண்கள் குணமடையும்.
30 கிராம் அரச வேர்ப்பட்டையை 300 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகினால் வெட்டை சூடு, சொறி, நீர் எரிச்சல், சிரங்கு குணமாகும்.
அரசு, ஆல், இச்சி, அத்தி, வேம்பு ஆகிய முற்றிய மரங்களின் பட்டையை கஷாயம் செய்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மூலப்புண் குணமடையும், வயிற்றுப் புண்ணும் பஞ்சாய் பறந்திடும்.
அரச பட்டைத்தூளை இரண்டு சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டி குடித்தால் விக்கல், தொண்டைக்கட்டு மற்றும் குரல்வளை நோய் நீங்கும்.
அரச இலையை கஷாயமிட்டு குடித்து வர பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகள் குணமாகும்.
அரச மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து ஒரு எலுமிச்சையளவு குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் ஆவதற்கு முன் மூன்று நாட்கள் தந்தால் சூல் அமைய வாய்ப்பு உண்டு.
அரச மரத்தினை தினசரி அரை மணி நேரம் கட்டிபிடித்து கலந்து நின்றால் உடல் சக்தி பெருகும் என்பர். தாங்களும் செய்து பார்க்கலாமே!
குருநாதபுரம்( IN BETWEEN AMBUR - GUDIYATAM ROAD. VELLORE DT)
நைமிசாரண்யத்தில் உள்ள அரச மரம் தற்போது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. தனுசு ராசியையோ அல்லது பூசம் (முதலாம் பாதம்) மற்றும் கேட்டை (மூன்றாம் பாதம்) நட்சத்திரத்தையோ சார்ந்த அன்பர்கள் நைமிசாரண்யம் வரும்போது வீட்டில் ஊற வைத்த நவதானிய நீரை எடுத்து வந்து தங்கள் கைகளால் இந்த மரத்திற்கு ஊற்றலாம். குறிப்பாக ஆண்டு ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று காலை நேரத்தில் இதனை செய்திட அவர்களது வாழ்வு வளம் பெறும்.
குறிப்பு:
உடல் தூய்மை மற்றும் மனத்தூய்மையுடன் கூடிய உணர்வோடு செய்யப்படும் போது மட்டுமே பலன் உண்டு. காரணம் மரங்களுக்கும் உணர்வுகளும் சிந்தனைகளும் உண்டு.
மரம் வளர்ப்போம் - நிலம் காப்போம்
Comments